சென்னை: பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் – டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சுமார் ஓராண்டுக்குப்பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது. இது இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் எதிரொலித்து வருகிறது.
இதுமட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனாலும் எரிபொருள் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. ஏறத்தாழ கடந்த ஒருவார காலமாகவே ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வடைந்தது.
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.25 ரூபாய், டீசல் லிட்டர் 85.63 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.59 ரூபாய் எனவும், டீசல் விலையில் லிட்டருக்கு 85.98 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகளும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வருகின்றன.