செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரை தடுத்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என பத்திரிகையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதையொட்டி, நடிகர் கமல், கோவையில் போட்டியிட்டார். இதைதொடர்ந்து, கோவையில் வாக்குப்பதிவை பார்வையிட நடிகர் கமல் வந்தார். அவரிடம், செய்தி சேகரிக்க நிருபர்கள் திரண்டனர். அப்போது ஒரு நிருபரை, தனது கைத்தடியால் கமல் தள்ளி விட்டதாக தெரிகிறது. இச்சம்பவத்தின் வீடியோ புகைப்படங்கள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் கமலின் செயலுக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலுக்கு, கோவை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தி சேகரிக்க வந்த தொலைக்காட்சி செய்தியாளர் மோகன் என்பவரை தனது கைத்தடியால் தடுத்து நிறுத்தியதற்கு கோவை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்ததோடு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.